டெல்லி டூ கோவைக்கு ரெட் ஐ விமானம்.. தொடங்குகிறது ஏர் இந்தியா!
டெல்லி: டெல்லி - கோவை இடையே ரெட் ஐ வி்மானப் போக்குவரத்தை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கவுள்ளது.
கோவை தவிர கோவா, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கும் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. அடுத்த மாத இறுதியில் இந்த சேவை தொடங்கவுள்ளது.
ரெட் ஐ சேவை என்பது என்னவென்றால் இரவில் விமானம் கிளம்பி அதிகாலை அல்லது காலையில் சென்று சேரும். இப்படிப்பட்ட சேவைக்குத்தான் ரெட் ஐ சேவை என்று பெயர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இது பிரபலமாக உள்ளது. நமது நாட்டில் இதுவரை இல்லை.
ஏர் இந்தியா விமானம் இந்த சேவையை தற்போது அறிமுகப்படுத்துகிறது. இதை குறைந்த கட்டணத்தில் அவர்கள் இயக்கப் போகின்றனர். டெல்லி - கோவா - டெல்லி, டெல்லி - கோவை - டெல்லி, பெங்களூர் - அகமதாபாத் - பெங்களூர் ஆகிய மார்க்கங்களில் இந்த விமானங்கள் இயக்கப்படும்.
நவம்பர் 30ம் தேதி முதல் இந்த சேவை தொடங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இவை தினசரி சேவையாக இருக்கும்.
சேவைத் திட்டம்:
டெல்லி டூ கோவா
டெல்லி புறப்பாடு இரவு 10 மணி. கோவாவுக்கு நள்ளிரவு 12.35 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் நள்ளிரவு 1.15க்குப் புறப்பட்டு அதிகாலை 3.40க்கு டெல்லி வந்தடையும்.
டெல்லி டூ கோவை
டெல்லியிலிருந்து 9.15க்குப் புறப்பட்டு கோவையை நள்ளிரவு 12.30 மணிக்கு வந்தடையும். மறு மார்க்கத்தில் நள்ளிரவு 1 மணிக்குப் புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு டெல்லியை சென்றடையும்.
பெங்களூர் டூ அகமதாபாத்
பெங்களூரில் நள்ளிரவு 12.30க்குப் புறப்பட்டு, அகமதாபாத்தை நள்ளிரவு 2.35 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் அகமதாபாத்திலிருந்து அதிகாலை 3.05 மணிக்குப் புறப்பட்டு காலை 5.25க்கு பெங்களூரை வந்தடையும்.