ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்கள்: அதிமுக திடீர் எதிர்ப்பு-லோக்சபாவில் ஆதரித்த நிலையில் தடாலடி மாற்றம்!
டெல்லி: ராஜ்யசபாவில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வேளாண் மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன. லோக்சபாவில் இந்த மசோதாக்களை ஆதரித்த அதிமுக இன்று ராஜ்யசபாவில் மிகக் கடுமையாக எதிர்த்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொரோனா லாக்டவுன் காலத்தில் 3 வேளாண் அவசர சட்டங்களைக் கொண்டு வந்தது. தற்போது இந்த சட்டங்களுக்குப் பதில் மசோதாக்களை லோக்சபாவில் அறிமுகப்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வழக்குப் போட வேண்டுமென்றால் அனைவர் மீதும் போட வேண்டும்... அதிமுக மீது பாயும் எல்.முருகன்..!
அதிமுக ஆதரவு- கடும் எதிர்ப்பு
இதனால் வேறுவழியே இல்லாமல் பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் கூட வேளாண் மசோதாக்களை எதிர்க்கும் நிலைக்கு சிரோமணி அகாலிதளம் தள்ளப்பட்டது. இதனால் மத்திய அமைச்சரவையில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது. லோக்சபாவில் அதிமுக இந்த மசோதாவை ஆதரித்தது கடும் சர்ச்சையானது. இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனியும் தன்னை விவசாயி என அழைக்கக் கூடாது என கூறியிருந்தார்.
நியாயப்படுத்திய எடப்பாடி
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை நியாயப்படுத்தி இருந்தார். மேலும் மு.க.ஸ்டாலின்தான் இந்த மசோதாக்களை வைத்து அரசியல் செய்வதாகவும் குற்றமும் சாட்டியிருந்தார். இந்த நிலையில் ராஜ்யசபாவில் இந்த சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன.
இன்று ராஜ்யசபாவில் தாக்கல்
வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், குறைந்த பட்ச ஆதரவு விலைக்கும் இந்த மசோதாக்களுக்கும் எந்த தொடர்புமே இல்லை என்றார். இந்த தேசத்தில் எங்கு வேண்டுமானால் விவசாயிகள் விலைபொருட்களை விற்பனை செய்யும் நிலைமை உருவாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதிமுக திடீர் எதிர்ப்பு
இம்மசோதாவுக்கு எதிராக பேசிய திமுக எம்பி டி.கே.எஸ். இளங்கோவன், விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது. விவசாயிகளை அடிமைப்படுத்தும் வகையில் உள்ளன இந்த மசோதாக்கள். விவசாயிகளுக்கு எதிரான இத்தகைய மசோதாக்களை திமுக கடுமையாக எதிர்க்கிறது என்றார். இதில் புதிய திருப்பமாக அதிமுகவும் வேளாண் மசோதாக்களை கடுமையாக எதிர்த்தது.
வேளாண் மசோதாவை நிறைவேற்ற கூடாது
அதிமுக எம்பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், வேளாண் மசோதாக்களை மிக கடுமையாக விமர்சித்தார். இந்த மசோதாக்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை என விமர்சித்தார். இத்தகைய மசோதாக்கள் விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பவை எனவும் சாடினார் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம். அதிமுகவின் இந்த திடீர் தலைகீழ் மாற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.