குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. ராஜ்யசபாவில் அதிமுக உள்ளிட்ட 4 கட்சிகள் நினைத்தால் நிறைவேறும்!
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறுவது என்பது அதிமுக, பிஜேடி, ஒய்எஸ்ஆர் காங்கிரம் மற்றும் டி.ஆர்.எஸ். ஆகிய 4 கட்சிகளின் கைகளில்தான் இருக்கிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பவுத்தர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
இது தொடர்பான மசோதா, லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேறிவிட்டது. தற்போது ராஜ்யசபாவில் இதனை தாக்கல் செய்ய இருக்கிறது மத்திய அரசு. ராஜ்யசபாவில் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனைத் தாக்கல் செய்ய உள்ளார்.
தேவை 120 எம்.பிக்கள்
245 எம்.பிக்களைக் கொண்ட ராஜ்யசபாவில், தற்போது 238 எம்.பிக்கள் உள்ளனர். மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்ற 120 எம்.பிக்கள் ஆதரவு தேவை.
ராஜ்யசபாவில் பாஜக அணி
ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 102 எம்.பிக்கள்தான் உள்ளனர். தற்போது 18 எம்.பிக்களின் ஆதரவுக்காக அதிமுக, பிஜேடி, டி.ஆர்.எஸ்., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதிமுக நிலை?
பாஜகவுடன் அதிமுக இணக்கமான போக்கையே கடைபிடித்து வருகிறது. இதனால் அதிமுகவின் 11 எம்.எபிக்கள் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் என்பது பாஜகவின் கணக்கு.
பிஜேடி எதிர்ப்பு
அதேபோல் 7 எம்.பிக்களைக் கொண்ட பிஜூ ஜனதா தளமும் பாஜகவுடன் நல்ல புரிதலில் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே குடியுரிமை சட்ட திருத்தத்தை பிஜூ ஜனதா தளம் எதிர்த்திருக்கிறது.
ஆந்திரா, தெலுங்கானா கட்சிகள்
அதேபோல் 6 எம்.பிக்களைக் கொண்ட டி.ஆர்.எஸ், 2 எம்.பிக்களைக் கொண்ட ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸும் பாஜகவுடன் சுமூக உறவில் இருக்கின்றன. இந்த கட்சிகள் கை கொடுத்தாலே போதும்,, ராஜ்யசபாவில் மசோதா எளிதாக நிறைவேடும். அதனால் இக்கட்சிகளை மலைபோல் நம்பியிருக்கிறது பாஜக.