சூப்பரா பேசுனீங்க.. நாடாளுமன்றத்தில் அதிமுக பெண் எம்பியை கைகுலுக்கி பாராட்டிய திமுக எம்பி!
டெல்லி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த் ராஜ்யசபாவில் நேற்று கோரிக்கை விடுத்தார். இதற்கு திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அவருக்கு கைகொடுத்து பாராட்டினார்.
ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்காக த தமிழகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றுள்ளனர்.
அங்கு தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் அங்கு ஏராளமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்ந நாட்டு அமைச்சர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானில் கொரோனா
சீனாவை தொடர்ந்து தென்கொரியா, ஈரான், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரானில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் தீவிரமாக ஈரானில் பரவி வருவதன் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஈரானில் உள்ள தமிழக மீனவர்கள் தாங்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள்.
தமிழகம் திரும்ப
தங்களை திரும்பவும் இந்தியாவுக்கு அழைத்து செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நிலையில் மீனவர்கள் தமிழகம் திரும்பிவிட்டால் மீன்பிடி தொழிலுக்கு வரமாட்டார்கள் என்று அவர்களின் ஆவணங்களை அவர்களின் முதலாளிகள் பறித்து வைத்துள்ளார்களாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
மீனவர்களுக்காக பேச்சு
மீனவர்களின் இந்த நிலை குறித்து ராஜ்யசபாவில் அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் முட்டம் ஆகிய பகுதிகளை சார்ந்த 400 மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை தேவைகளான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கூட கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். எனவே மீனவர்களை ஈரானில் இருந்து விமானத்தில் அழைத்துவர முடியாத நிலை இருந்தால், கப்பல் மூலமாவது அருகில் உள்ள துறைமுகத்துக்கு அனுப்பி அங்கிருந்து பத்திரமாக ஊர் திரும்ப ஏற்பாடு செய்யவேண்டும்" என்றார்.
திமுக எம்பி பாராட்டு
இதன் பின்னர் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த்தை தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்து அவரோடு கைகுலுக்கி பேசினார். இதுபற்றி விஜிலா சத்யானந்த் கூறுகையில், மீனவர்களை மீட்டு வரும் கோரிக்கை பற்றி சிறப்பாக பேசியதற்காக டி.கே.எஸ்.இளங்கோவன் பாராட்டினார் என்றார். கட்சி பாகுபாடு இல்லாமல் அதிமுக எம்பியை திமுக எம்பி பாராட்டி செயல்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஆரோக்கியமான முன்னேற்றமாக எம்பிக்கள் பார்க்கிறார்கள்.