வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதா? சசிகலா புஷ்பா கொந்தளிப்பு
டெல்லி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.
ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். இதற்கான அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளது. அதேநேரத்தில் வைகோ எம்.பி.யாகக் கூடாது என பாஜகவினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது பாஜகவை போல அதிமுக எம்.பி.யான சசிகலா புஷ்பாவும் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நாளை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு ஒன்றை தர இருக்கிறாராம் சசிகலா புஷ்பா.
அப்போது தேசதுரோக வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என வலியுறுத்த இருக்கிறாராம் சசிகலா புஷ்பா.