மேகதாது அணையை கட்டக் கூடாது... அதிமுக எம்.பி-க்கள் 7 வது நாளாக போராட்டம்
டெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகதாதுவில் அணை கட்டி குடிநீர் மற்றும் மின் உற்பத்தி தேவையை பூர்த்தி செய்ய கர்நாடகா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கி இருப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து அதிமுக எம்.பி-கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற வளாகத்தில், கையில் பதாகைகளை ஏந்தியவாறு அதிமுக எம்.பி-க்கள் 7வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, தெலுங்கு தேச கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.