தேசிய மருத்துவ ஆணைய மசோதா.. எதிர்ப்பு தெரிவித்த அதிமுக.. மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
டெல்லி: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக கட்சி சார்பாக தாக்கல் செய்யப்படும் பெரும்பாலான மசோதாக்கள் பெரும் சர்ச்சையை சந்தித்துள்ளது. முத்தலாக் மசோதா, என்ஐஏ மசோதா, தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா எல்லாம் பெரிய சர்ச்சையானது.
இந்த நிலையில் கடந்த வாரம் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
என்ன மசோதா
இந்திய மருத்துவ கவுன்சில்தான் தற்போது மருத்துவத்துறையை இந்தியாவில் கவனித்து வருகிறது. இதற்கு மாற்றாக தற்போது தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட உள்ளது. இனி இந்த கவுன்சில் கலைக்கப்படும், மொத்தமாக இதில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படும். இதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படும்.
என்ன தேர்வு
இந்த தேசிய மருத்துவ ஆணையம் மூலம்தான் நீட் தகுதி தேர்வும், மருத்துவ மேல் படிப்பிற்கான நெக்ஸ்ட் தேர்வும் நடத்தப்படும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்த இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இது தற்போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எல்லாம்
இதற்கு இரண்டு அவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளது. அதேபோல் மசோதாவிற்கு அதிமுக கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக நிலை
நீட், நெக்ஸ்ட் தேர்வுகளை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆனால் இந்த மசோதா அந்த தேர்வுகளுக்கு பலம் சேர்க்கிறது. அதனால் இதை ஆதரிக்க முடியாது என்று அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் அனைத்து ராஜ்ய சபா எம்பிக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏன் இப்படி
ஆனால் மாநிலங்களவையில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. இதனால் மசோதாவிற்கு எதிராக அதிமுக வாக்களிக்காது. சென்ற முறை முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதும் அதை மாநிலங்களவையில் எதிர்த்த அதிமுக, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் முத்தலாக் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியதும் குறிப்பிடத்தக்கது.