லோக்சபாவில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு அதிமுக திடீர் எதிர்ப்பு
டெல்லி; லோக்சபாவில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு அதிமுக நேற்று திடீரென எதிர்ப்பு தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
லோக்சபாவில் அதிமுகவின் ஒற்றை எம்.பி.யான ரவீந்தரநாத் குமார் தொடக்கம் முதலே மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் பேசி வருகிறார். பட்ஜெட் மற்றும் மசோதாக்கள் மீது மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துகளை முன்வைத்தார்.
அதே பாணியில் சர்ச்சைக்குரிய முத்தலாக் மசோதாவையும் அதிமுக ஆதரித்தது பெரும் சர்ச்சையானது. முத்தலாக் மசோதாவை எதிர்த்து தனது கருத்துகளை அதிமுகவின் எம்பி அன்வர்ராஜா நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்.
தற்போது முஸ்லிம்கள் கணிசமாக உள்ள வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் முத்தலாக் மசோதாவை அதிமுக ஆதரித்ததை திமுக தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறது.
இதனால் அதிமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்திருக்கிறது. இதனையடுத்தே மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நேற்று தாக்கல் செய்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ரவீந்தரநாத் குமார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
அவர் தமது பேச்சில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் நீட், நெக்ஸ்ட் உள்ளிட்ட தேர்வுகளை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. அதிமுகவின் எம்.பி. என்பதால் நான் இதை எதிர்க்கிறேன் என பேசியுள்ளார்.
முன்னதாக திமுக எம்.பி. ஆ.ராசா , தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மிக கடுமையாக விமர்சித்து பேசியிருந்ததார்.