முத்தலாக் மசோதா- அரசியல் சாசனத்துக்கு எதிரானது: ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்
டெல்லி: மத்திய அரசின் முத்தலாக் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் மிக கடுமையாக எதிர்த்துள்ளார்.
மூன்று முறை தலாக் கூறி முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யும் முறைக்கு எதிராக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து முத்தலாக் முறையை தடை செய்யும் சட்டமசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இம்மசோதா லோக்சபாவில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது. இன்று ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இம்மசோதாவை அறிமுகம் செய்து வைத்தார்.
வெட்கக்கேடான நாள்- வைகோ
அப்போது, இது வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் என்று பேசினார். இதற்கு உடனே மறுப்பு தெரிவித்த மதிமுக எம்.பி. வைகோ, வெட்கத்துக்கும் வேதனைக்குரியதுமான நாள் என்றார். அப்போது குறுக்கிட்ட ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, மூத்த உறுப்பினர் வைகோ பொறுமை காக்க வேண்டும் என்றார்.
மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு
இதையடுத்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், முத்தலாக் சட்டமானது இந்திய அரசியல் சட்டத்துக்கே எதிரானது.
அது எப்படி குற்றமாகும்?
முஸ்லிம் கணவர் ஒருவர் மூன்று முறை தலாக் கூறுவதலாயே அது கிரிமினல் குற்றமாக கருத முடியாது. இம்மசோதா கடும் கண்டனத்துக்குரியது. இவ்விவகாரத்தில் பாதிக்கப்படும் குழந்தைகள் நலன் குறித்து மாஜிஸ்திரேட் முடிவு எடுப்பார் என சட்ட திருத்தம் கொண்டு வருவது சரியானது அல்ல என காட்டமாக பேசினார்.
அதிமுக இரட்டை நிலைப்பாடு
மேலும் முத்தலாக் மசோதா எப்படி சட்டவிரோதமானது என்பதற்கான சான்றுகளையும் முன்வைத்து நவநீதகிருஷ்ணன் வாதிட்டார். ஏற்கனவே லோக்சபாவில் அதிமுக எம்பி ரவீந்தரநாத் குமார் முத்தலாக் மசோதாவை ஆதரித்து பேசிய நிலையில் ராஜ்யசபாவில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கடுமையாக எதிர்ப்பு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.