18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றம் போனாலும் விடப்போவதில்லை.. அதிமுக கொறடா கேவியட் மனு
டெல்லி: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று அதிமுக கொறடா இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அவர்கள் தரப்பு தாக்கல் செய்த வழக்கை சென்னை ஹைகோர்ட் விசாரணை நடத்தியது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த விஷயத்தில் சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கினார். சக நீதிபதி சுந்தர், சபாநாயகரின் முடிவு உள்நோக்கம் கொண்டது என்பதால், இந்த உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார்.
3வது நீதிபதி தீர்ப்பு
மாறுபட்ட தீர்ப்பு வெளியானதையடுத்து, 3வது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டு அவர் விசாரணை நடத்தி, கடந்த வாரம், வியாழக்கிழமை தனது தீர்ப்பை வழங்கினார்.
மேல்முறையீடு திட்டம்
18 பேரையும் தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவு சரியானதுதான் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜேந்திரன் கேவியட்
இந்நிலையில், அதிமுக கொறடா ராஜேந்திரன் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தகுதிநீக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 18 பேர் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.
விடப்போவதில்லை
ஏற்கனவே சபாநாயகர் தரப்பும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் சென்றாலும் விடமாட்டோம் என்பதில் சபாநாயகர் மற்றும் ஆளும் கட்சி உறுதியாக உள்ளது இதன் மூலம் உறுதியாகிறது.