கொரோனா வைரஸ் புதிய திரிபு - எய்ம்ஸ் இயக்குனர் கருத்தால் பீதியில் கேரளா
டெல்லி: கொரோனா வைரஸின் புதிய திரிபு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் இறங்குமுகமாக உள்ளது. ஆனால், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் இன்னும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
மொத்தம் பதிவு செய்யப்பட்ட 80,536 புதிய கொரோனா தொற்று பாதிப்பில், கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் மொத்தம் 56, 932 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதிலும், கேரளாவில் மட்டும் 39,260 பாதிப்புகள்.
புழக்கத்தில் உள்ளதா?
இது குறித்து பேசிய டெல்லியின் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா, "கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் அதிகரிப்பதால், இவ்விரு மாநிலங்களில் கொரோனா வைரஸின் புதிய திரிபு புழக்கத்தில் உள்ளதா என்பதை நாம் விசாரிக்க வேண்டும் என்று ஐஏஎன்எஸ்ஸிடம் கூறினார்.
இறுதியில் சொதப்பிய கேரளா
கேரளாவைப் பொறுத்தவரை, தேசிய கோவிட் -19 பணிக்குழுவில் உறுப்பினராக உள்ள குலேரியா, கொரோனா இந்தியாவில் பரவ ஆரம்பித்த போது, கேரளா மிகச் சிறப்பான அளவில் தடுப்புப் பணிகளை மேற்கொண்டது என்பதை ஒப்புக் கொண்டார். இருப்பினும், அதன்பிறகு மாநிலத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், நிலைமை தற்போது மோசமடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதுவும் ஒரு காரணம்
கேரளாவில் ஏராளமானோர் வயதானவர்களாக உள்ளனர். இதனால் அவர்கள் இயற்கையாகவே ஒன்றுக்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அங்கு அதிகமாக பரவுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று குலேரியா கூறியுள்ளார்.
இரு மடங்கு அதிகம்
சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையின்படி, கேரளாவில் ஆஸ்துமாவினால் ஒரு லட்சம் பேரில் 4,806 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது, ஒட்டுமொத்த இந்தியாவில் ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் (1 லட்சம் பேரில் 2,468 பேர்) எனும் அளவை விட இரு மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.