தொடர்ந்து உருமாறும் கொரோனா.. 2 டோஸ் போதாது, மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம்.. எய்ம்ஸ் இயக்குநர்
டெல்லி: உருமாறிய கொரோனா வகைகள் தொடர்ந்து தோன்றி வருவதால், மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் வேக்சின் அளிக்க வேண்டிய தேவை உருவாகலாம் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையைப் பயன்படுத்தி வேக்சின் பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சூப்பர்.. இந்த 5 கோயில்களில் விரைவில் ரோப்கார் வசதி.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி..!
அதேநேரம் தொடர்ந்து புதிது புதிதாகத் தோன்றும் உருமாறிய கொரோனா காரணமாக, பிரிட்டன் போன்ற நாடுகள் பொதுமக்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் அளிப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றன.
தடுப்பாற்றல் குறைந்தால்
இந்நிலையில், கொரோனா பூஸ்டர் டோஸ் பற்றி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், "பொதுமக்கள் மத்தியில் நோயெதிர்ப்பு சக்தி குறையும்போது, பூஸ்டர் டோஸ் நமக்குத் தேவை. அதாவது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையும் போது அதை, பூஸ்டர் டோஸ் மூலம் ஈடு செய்து கொள்ளலாம். புதிய உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்தும் அடுத்த தலைமுறை வேக்சின்களை கொண்டு இந்த பூஸ்டர் டோஸை பணிகள் மேற்கொள்ளப்படும்.
பூஸ்டர் டோஸ்
இந்த பூஸ்டர் டோஸ் குறித்த மருத்துவ சோதனைகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. நாட்டிலுள்ள அனைவருக்கும் இரண்டு டோஸ் வேக்சின் செலுத்தப்பட்ட பிறகு, பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கும் வாய்ப்புகள் அதிகம்" என்று அவர் குறிப்பிட்டார்.
சிறார்களுக்கான வேக்சின்
மேலும், குழந்தைகளுக்கான வேக்சின் எப்போது கிடைக்கும் என்பது குறித்துப் பேசிய அவர், "இந்தியாவில் குழந்தைகளுக்கு அளிக்கக் கூடிய கொரோனா வேக்சின் குறித்து சோதனை ஏற்கனவே நடைபெற்று வருகிறது. சிறார்கள் மத்தியிலான கோவாக்சின் சோதனை தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. செப்டம்பர் மாதம் தடுப்பூசி சோதனைகள் குறித்த முடிவு நமக்குக் கிடைத்துவிடும்.
ஸைடஸ் காடிலா
12-18 வயதுடைய சிறார்கள் மத்தியில் ஸைடஸ் காடிலா வேக்சின் சோதனை ஏற்கனவே முடிந்துவிட்டது. ஸைடஸ் காடிலா நிறுவனம் ஏற்கனவே அவரசக்கால அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. நாட்டில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சிறார்களுக்கான வேக்சினுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, வேக்சின் பணிகள் தொடங்கிவிடும். எனவே, பள்ளிகளை படிப்படியாக நாம் திறக்க தொடங்கலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.