செப்டம்பரில் கொரோனா 3வது அலைக்கு சான்ஸ்.. பள்ளிகளை எப்போது திறக்கலாம்? எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்
டெல்லி: செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும் என்பதால், பள்ளிகள் திறப்பதில் கவனம் தேவை என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.
மூன்றாவது அலை குறித்த பயம், சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது அலையின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியர்களிடம் இருக்கிறது.
இந்த நிலையில்தான் புகழ்பெற்ற நுரையீரல் நிபுணரும், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குநருமான டாக்டர் ரன்தீப் குலேரியா, ஆங்கில தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த கவலைகளில் சிலவற்றை உறுதிப்படுத்தும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதோ அவரது பேட்டியிலிருந்து..
தமிழ்நாட்டில் மேலும் 1,872 பேருக்கு கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு அதிகம்!
மந்தை எதிர்ப்பு சக்தி
செரோ கணக்கெடுப்பில், நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு ஏற்கனவே ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவதாகவும், நாம் அதிகம் கவலைப்பட தேவையில்லை என்பது இதன் அர்த்தமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், நாம் அதைச் சொல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. மூன்றில் ஒரு பங்கு எளிதில் பாதிக்கப்படுகிறது. நாம் செரோ கணக்கெடுப்பை சரியான முறையிலும் பார்க்க வேண்டும். எத்தனை பேருக்கு ஆன்டிபாடிகள் உள்ளன என்பதை செரோ கணக்கெடுப்பு நமக்குக் கூறுகிறது. இப்போது நாம் மனதில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன.
ஆன்டிபாடி குறையுமே
உங்களிடம் ஒரு 'எக்ஸ்' அளவு இருந்தால் நீங்கள் சொல்வதை பரிசீலிக்கலாம். இரண்டாவதாக, ஆன்டிபாடிகள் காலப்போக்கில் குறையும் என்பதை நாம் அறிவோம். ஆகவே ஆன்டிபாடிகள் ஏற்பட்டு இப்போது பல மாதங்கள் ஆகிவிட்டன, தடுப்பூசி போடாவிட்டால் ஆன்டிபாடி எண்ணிக்கை படிப்படியாக குறையும். மேலும் அவர்கள் மீண்டும் தொற்றுநோய்க்கு ஆளாகக்கூடும்.
கடுமையான பாதிப்பாக இருக்காது
அதேநேரம் ஆன்டிபாடி இருக்கும், செய்தி நல்லது. ஏனென்றால் கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு ஆன்டிபாடிகள் இருப்பதாகவும், எனவே அடுத்தடுத்த அலைகள் முந்தையதைப் போலவே மோசமாக இருக்காது என்பதை இது காட்டுகிறது. முந்தைய செரோ கணக்கெடுப்பில் இது சுமார் 20-21 சதவிகிதம் மட்டுமே இருந்தது. இப்போது நாம், 50 சதவிகிதத்தையும் 60 சதவிகிதத்தையும் தாண்டிவிட்டோம்.
அதாவது பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, தடுப்பூசிகளும் இப்போது அதிகரித்து வருகின்றன. எனவே, எதிர்காலத்தில், நோய் பரவினாலும் குறைந்த பட்சம் கடுமையான அளவாக நோய் பாதிப்பு இருக்காது என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி என்று நான் நினைக்கிறேன். லேசான நோய் இருக்கலாம், இதனால், நமக்கு, மோசமான மூன்றாவது அலை இருக்காது.
தடுப்பூசி போடாதவர்கள் ஜாக்கிரதை
இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு ஆன்டிபாடிகள் இருப்பதை செரோ பாதிப்பு கண்டறிந்துள்ளதால், மூன்றாவது அலை இரண்டாவது அலை போல மோசமாகவோ அல்லது கடுமையாகவோ இருக்காது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இது மூன்றாவது அலை வருவதை ஒத்திப்போடுமா, எப்போது, கொரோனா மூன்றாவது அலை எப்போது வரும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது ஒரு கடினமான கேள்வி, ஏனெனில் மூன்றாவது அலையின் நேரத்திற்கு நிறைய காரணிகள் இருக்கலாம். மேலும், இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு என்று சொல்லும்போது, இது ஒரு பொதுவான காலப்பகுதியைதான் சுட்டிக் காட்டுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் அதிகமாக குவிந்துள்ள பகுதிகளில் தொற்று வேகமாக பரவுகிறது. தடுப்பூசி செலுத்திய பலரை நீங்கள் ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பீர்கள். ஆனால் உங்களிடம் பிற பகுதிகளும் உள்ளன, அங்கு ஏராளமான மக்கள் தடுப்பூசி போட தயங்குகிறார்கள். அவர்கள் தங்களுக்கு தடுப்பூசி போடவில்லை. மேலும் இதுவரை நோயாலும் அவர்கள் பாதிக்கப்படாதவர்களாக இருப்பார்கள். 3வது அலையின்போது இவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மூன்றாவது அலை
எனவே, இந்த மூன்றில் இரண்டு பங்கு முழு இந்தியாவிலும் நோய் எதிர்ப்பு சக்தி உருவான விகிதம் என்று சொல்வதை ஏற்க முடியாது. நாம் பொதுமைப்படுத்த முடியாது. இது மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக இருக்கும் பகுதிகள் உள்ளன, மேலும் இது மூன்றில் இரண்டு பங்கிற்கும் குறைவானதாக இருக்கும் பகுதிகள் உள்ளன, அதனால்தான், இந்த பகுதிகளில் தொற்று பரவுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டால், கேஸ்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு மற்றும் புதிய அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது எப்போது நடக்கும் என்று சொல்வது கடினம். இப்போதிலிருந்து சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் கழித்து பாதிப்பு ஏற்படக் கூடும்.
இரண்டாவது அலை முடியவில்லை
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை பரவக்கூடும் என்று நான் நினைக்கிறேன். கேஸ்கள் குறைந்துவிட்டன என்றாலும் முதல் அலையை ஒப்பிட்டால் இப்போதும் கேஸ்கள் அதிகம்தான். 2வது அலையில் ஒரு நாளைக்கு 4 லட்சம் கேஸ் பதிவானது. இப்போது அது 30,000 கேஸ்களாக உள்ளன. ஆனால் இது அதிகமான எண்ணிக்கைதான். இரண்டாவது அலை முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.
குழந்தைகள் பாதுகாப்பு
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. ஏற்கனவே பரவிய அலையில் குழந்தைகள் அதிகம் பாதிகே்கப்படவில்லை. எனவே மந்தை எதிர்ப்பு சக்தியும் இரு்ககாது. ஆகையால், கேஸ்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும்போதெல்லாம், நோய்த்தொற்று ஏற்பட்ட அல்லது தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எங்களது ஆய்வில் குழந்தைகளுக்கு 60% ஆன்டிபாடிகள் இருந்தன. இது குழந்தைகளுக்கு ஏற்கனவே தொற்று ஏற்பட்டிருக்கலாம், லேசான தொற்றுடன் அவை போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பள்ளிகளை திறக்கலாமா
இப்போது நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போதுமான பாதுகாப்பானதா? பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது சரியா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இது ஒரு கடினமான கேள்வி, ஏனெனில் இது ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும். குழந்தைகள் 18 மாதங்களுக்கும் மேலாக நிறைய துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம், ஏனெனில் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இணையம் அல்லது கணினிகள் அல்லது ஸ்மார்ட்போன்கள் இல்லாத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையில் பள்ளியை விட்டு வெளியேறிவிட்டதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. பள்ளி என்பது ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வியைக் கொடுப்பது மட்டுமல்ல, இது சமூக தொடர்புகளைப் பற்றியது, இது நண்பர்களை உருவாக்குவது மற்றும் பல விஷயங்களைப் பற்றியது. எனவே, இவை அனைத்தையும் நாம் பார்த்தால், பாசிட்டிவ் ரேட் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே பள்ளிகளைத் திறப்பதற்கான வழியை ஏற்படுத்தலாம்.
பள்ளிகளை திறப்பதற்கு வழிமுறை
எடுத்துக்காட்டாக, நேர்மறை விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாகவும், மிகக் குறைவான கேஸ்கள் உள்ள ஒரு பகுதியிலும் பள்ளிகளை திறக்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என மாறி மாறி பேட்ஜ் பிரித்து மாணவர்களை பள்ளிக்கு வர வைத்தால் நெருக்கமாக அமர்வது தவிர்க்கப்படும். செப்டம்பர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும். அதுவும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறோம். எனவே, பேட்ஜ் பிரித்து, பள்ளிகளைத் திறப்பதை நாம் ஆரம்பிக்கலாம். இவ்வாறு டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.