கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட.. நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உடல்நிலை கவலைக்கிடம்!
டெல்லி: பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று காரணமாக சோட்டா ராஜன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உலக நாடுகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டி வந்தார். பிரபல நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமும், சோட்டா ராஜனும் நண்பர்கள் ஆவார்கள். சோட்டா ராஜன் இந்தியாவில் பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டிருந்தார். பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தபோதும் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி தப்பித்து வந்தார் சோட்டா ராஜன்.
1988-ல் துபாய்க்கு சென்று செட்டிலான சோட்டா ராஜன் அங்கு இருந்தபடி நாசவேலையில் ஈடுபட்டு வந்தார். 2000-ம் ஆண்டில் தாவூத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோட்டா ராஜன் விலகினார். இதனை தொடர்ந்து அவரது உயிருக்கு பலரும் கட்டம் கட்டினார்கள். இதனை தொடர்ந்து மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த சோட்டா ராஜனை இந்தேனேசியாவில் 2015-ல் கைது செய்தனர்.
அவரை திஹார் சிறையில் அடைத்தனர். மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் 2018 இல் இவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இதற்கிடையே சோட்டா ராஜனுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் சோட்டா ராஜன் உயிரிழந்து விட்டதாக தகவல் பரவின. ஆனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சை அளித்து வருவதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.