ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது.. கொசுவலை, மினரல் வாட்டர் கொடுங்க.. டெல்லி ஹைகோர்ட் உத்தரவு
டெல்லி: திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கொசுவலை வழங்குமாறு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் ப.சிதம்பரம். அவர் டெல்லி திகார் சிறைச்சாலையில், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர், 6 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது உடல்நிலை, கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் மோசமாகி வருவதாகவும், அதனால் மூன்று நாட்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் எனவே உடல்நிலையைக் கருத்தில்கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து பரிசீலித்து, அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பது அவசியமா, இல்லையா என்பது பற்றி வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு நிபுணர் குழுவை அமைத்து, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை குழு, இன்று, தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் சிதம்பரம் உடல்நிலை நன்றாக உள்ளது, சிறை அறையை சுத்தமாக வைத்துக் கொண்டு, கொசுவலை பயன்படுத்தி கொள்ளலாம். சிறப்பு சிகிச்சை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், சிதம்பரத்திற்கு வாரம் ஒருமுறை, மருத்துவப் பரிசோதனை செய்யவும், மாசு பிரச்சினையை சமாளிக்க, முகத்தை மூடும் அளவுக்கு மாஸ்க் வழங்கவும் உத்தரவிட்டது.
புற நோயாளியாக சிகிச்சை அளிக்க வேண்டும், சிறப்பு சிகிச்சை தேவையில்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் சிதம்பரம் பயன்படுத்துவதற்கு ஒரு கொசு வலை வழங்கப்பட வேண்டும், மினரல் வாட்டர் தரப்பட வேண்டும் என்றும் தனது உத்தரவில் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து இடைக்கால ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.