அம்மாடியோவ்... 5.7 கோடி பேர் குடிக்கு அடிமையானவங்க.... எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டெல்லி: இந்தியாவில் கிட்டத்தட்ட 5.7 கோடி பேர் மதுபழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற உண்மை தெரிந்தும்... அதனை பயன்படுத்தும் நபர் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நிலையில், இந்தியாவில் எத்தனை பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை ஒருஆய்வை நடத்தியது.
அந்த ஆய்விற்காக 186 மாவட்டங்களில் உள்ள 2,00,111 வீட்டிற்கு நேரடியாக சென்று மொத்தம் 16 கோடி பேரிடம் கருத்து கேட்டது. ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை தந்துள்ளது.
அதில் தான்.. இத்தனை பேர் நம்மை சுற்றி குடிமகன்களாக உள்ளனர் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. ஆய்வின்படி, இந்தியாவில் 5.7 கோடி பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சத்தீஸ்கர், கோவா, திரிபுரா, பஞ்சாப் மற்றும் அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில்தான் அதிகமாக மக்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இந்த முடிவினை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு, மதுப்பிரியர்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.