வட இந்திய விமான தளங்களை குறி வைக்கிறது ஜெய்ஷ் இ முகமது.. உஷார்.. உளவுத்துறை எச்சரிக்கை!
Recommended Video
டெல்லி: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தினர் வட இந்தியாவில் உள்ள விமான படை தளங்களின் மீது தற்கொலை தாக்குதலை நடத்தலாம் என உளவுத் துறை ரகசிய தகவலை அளித்தது. இதையடுத்து அந்த இடங்களில் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கிவிட்டு அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதனால் காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.
இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது கோபத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய எல்லைக்கு தீவிரவாதிகள் ஊடுருவல் செய்தாலும் அவர்களை இந்தியா ஓட ஓட விரட்டுவதால் ஆளில்லா விமானங்கள் மூலம் பஞ்சாப் எல்லை பகுதிகளில் ஆயுதங்கள், வெடிபொருட்களை பாகிஸ்தான் போடுவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
துபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு.. யாருக்காக கொண்டு வரப்பட்டன?
ஜம்மு காஷ்மீர்
இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், இந்திய- பாகிஸ்தான் எல்லையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தினர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் பஞ்சாப்பில் உள்ள தங்கு- பதான்கோட் பகுதிக்கு சென்று அங்கு பணத்தை கம்பியில்லா பரிவர்த்தனை மூலம் பெற்றுக் கொள்வர். அந்த குழுவிலிருந்து ஒரு பகுதியினர் ஜம்மு காஷ்மீருக்கு செல்வர் என தெரிவித்துள்ளது.
முகாம்கள்
இதுகுறித்து உளவுத் துறை கூறுகையில் இந்திய பகுதிக்கு எதிரே குரேஸ் பகுதியில் லோசர், துர்மத் மற்றும் தவ்பாத் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாம், தூத்னியல், சிரிகோட், ஆத்முகுவாம் ஆகிய பகுதிகளில் புதிய முகாம்களை ஜெய்ஷ் இயக்கத்தினர் அமைக்க முயற்சித்து வருகின்றனர்.
|
தற்கொலை படை தாக்குதல்
உரி போன்ற மற்றொரு தாக்குதலை நடத்த அந்த தீவிரவாத இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட ஜெய்ஷ் தீவிரவாதிகள் இந்திய விமான படை தளங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்துவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூத்த அதிகாரிகள்
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகர், அவந்திபூர், ஜம்மு, பதான்கோட், ஹிண்டன் (காசியாபாத்) உள்ளிட்ட விமான படை தளங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு அவரவர் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யுமாறு மூத்த அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
முப்படைகளின் வீரர்கள்
இதுகுறித்து சென்னையில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தல் வந்தாலும் அதை நமது முப்படைகளின் வீரர்கள் திறமையாக முறியடிப்பர் என்றார்.