ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.. 15 நாள் தடை நீக்கம்.. இன்றில் இருந்து திட்டமிட்டபடி துபாய் செல்லும்
டெல்லி: இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றில் (சனிக்கிழமை) இந்த விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து துபாய்க்கு வந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர்தான் அழைத்து வர வேண்டும் என்று துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்து இருந்தது. கடந்த 15 ஆம் தேதியில் இருந்து துபாய்க்கு விமான சேவை துவங்கியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் பயணிகள் சென்றனர்.
அவர்களில் இருவருக்கு துபாயில் இறங்கியவுடன் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு துபாய் சிவில் ஏவியேஷன் தடை விதித்தது. ஏர்இந்தியா அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி தடை விதிக்கப்பட்டது.
மேலும், துபாய் இரண்டு இந்திய கொரோனா நோயாளிகளுக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தான் செலவை ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.இதுகுறித்து கடிதம் எழுதி இருக்கும் துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம், ''ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எச்சரித்துள்ளோம். இந்த எச்சரிக்கை மீறப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா இறப்பு...ஒரு சதவிகிதமாக குறைக்க முயற்சி...மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!!
இந்த வகையில் வரும் 15 நாட்களுக்கு அதாவது, வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நோயாளிகளின் சிகிச்சை செலவை ஏற்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை செல்லுபடியாகும்'' என்று தெரிவித்தது.
இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கொடுத்த விளக்கத்தை தொடர்ந்து, இந்த விமான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும். இனி வரும் நாட்களில் மூன்று கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்பே துபாய் செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விளக்கம் அளித்தது.
இதையடுத்து இன்றில் (சனிக்கிழமை) இருந்து திட்டமிட்டபடி துபாய்க்கு செல்லவும், துபாயில் இருந்து திரும்பவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.