மதுபோதை டெஸ்டுக்கு டிமிக்கி... விமானத்தை இயக்கியபோது கிடுக்கிப்பிடி... இயக்குநர் பதவி பறிபோன சோகம்
டெல்லி: டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற விமானத்தை மதுபோதையில் ஓட்ட சென்ற அரவிந்த் கத்பாலியாவின் இயக்குநர் பதவி பறிபோனது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கடந்த 9-ஆம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் துணை விமானியாக இருந்தவர் கேப்டன் அரவிந்த் கத்பாலியா.
இவர் மதுபோதை தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ளாமல் விமானத்தில் ஏறிச் சென்றுவிட்டார். இதுகுறித்து டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது.
போக்குவரத்து இயக்குநர்
இதையடுத்து பறந்து கொண்டிருந்த விமானத்தை உடனடியாக தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதிகாரிகள் கத்பாலியாவுக்கு உத்தரவிட்டனர். கத்பாலியா துணை விமானியாக மட்டும் அல்லாது ஏர் இந்தியாவின் போக்குவரத்து துறை இயக்குநராகவும் உள்ளார்.
எதிர்ப்பு
இதற்கு முன்னரும் இவர் ஒரு முறை மதுபோதையுடன் விமானம் ஓட்ட சென்று சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதனால் இவருக்கு இயக்குநர் பதவி கிடைப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போதையில்
கத்பாலியா இயக்கிய விமானம் டெல்லிக்கு திரும்பி தரையிறங்கியதும், அரவிந்த் கத்பாலியாவிடம் Breath Analyser கருவி மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.
லைசன்ஸ் ரத்து
இதையடுத்து விதிகளை மீறியதாக அரவிந்த் கத்பாலியாவை 3 ஆண்டுகளுக்கு விமானம் ஓட்ட தடை விதித்ததுடன் அவரது லைசன்ஸையும் ரத்து செய்துவிட்டனர். பின்னர் ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்கங்கள் துறை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.