ஹலோ... ! பிளைட்டை பாகிஸ்தானுக்கு கடத்த போறோம்.. அதிர்ந்து பின்னர் அலர்ட்டான மும்பை விமான நிலையம்
டெல்லி: மும்பையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, விமானத்தை கடத்தப் போவதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததை அடுத்து, அனைத்து விமான நிலையங்களும் உச்ச கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
மும்பை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிக்கு தொலை பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர் ஒருவர்... இந்திய ஏர்லைன்ஸ் விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்படும் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.
இந்த மிரட்டலை அடுத்து மும்பை விமான நிலையம் பரபரப்புக்குள்ளானது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் முக்கியமான 8 பாதுகாப்பு விஷயங்களை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டன.
விமான நிலையங்களுக்குள் பார்வையாளர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடு, வாகனங்களை தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிப்பது, முக்கிய நுழைவு வாயிலிலேயே அனைத்து பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவது உட்பட முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் அனைத்து பகுதிகளிலும் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.