மத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்றனர்- கபில் சிபல்
டெல்லி: மத்திய அரசிடம் போதுமான நிதி இல்லாத காரணத்தால்தான் ஏர் இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் விமர்சித்துள்ளார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 100% பங்குகள் மற்றும் ஏர் இந்தியா- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை உள்ளடக்கிய ஏசாட்ஸ்-ன் 50% பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் ஏர் இந்தியாவின் பல்வேறு துணை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்படவில்லை.
ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்குவதற்கான கடைசி தேதி மார்ச் 17-ந் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இம்முடிவானது தேசவிரோதம் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் இம்முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக பாஜக எம்.பி.யே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மத்திய அரசின் இம்முடிவை காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கபில் சிபல் டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளதாவது:
மத்திய அரசிடம் போதுமான பணம் கையிருப்பில் இல்லை. அதனால்தான் இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது.
ஏர் இந்தியாவின் 100% பங்குகளும் விற்பனை- தேசவிரோதம் என மத்திய அரசு மீது சு.சுவாமி பாய்ச்சல்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் கீழே சென்றுவிட்டது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது.
இதனால்தான் வேறுவழியே இல்லாமல் மதிப்பு வாய்ந்த நாட்டின் சொத்துகளை விற்பனை செய்கிற வழியை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இவ்வாறு கபில் சிபல் கூறியுள்ளார்.