தனியாருக்கு விற்கலாம்.. இல்லையெனில் ஏர் இந்தியாவை மூட வேண்டியதுதான்.. அமைச்சர் ஹர்தீப் சிங் ஷாக்
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும், இல்லையென்றால் அதை மூடி விட வேண்டியதுதான் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும், இல்லையென்றால் அதை மூடி விட வேண்டியதுதான் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம். இந்த விமான நிறுவனம் மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால் மத்திய அரசு கடந்த ஆண்டு இந்த விமான நிறுவனம் மோசமான இழப்பை சந்தித்ததாக கூறியது.
ஏர் - இந்தியா நிறுவனம், 56 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியதாக் கூறப்பட்டது. இதனால் 76 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. மக்கள் தரப்பில் பெரிய எதிர்ப்பு நிலவியது.
ஏல முறையில் ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முடிவெடுத்தது. மத்திய அரசு இது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா விற்பனைக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று ராஜ்ய சபாவில் குரல் கொடுத்தது.
இதற்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்தார், அதில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும். அதை தனியாருக்கு விற்க வேண்டும். இல்லையென்றால் அதை மூட வேண்டியதுதான்.
ஏர் இந்தியாவை நடத்த எங்களிடம் நிதி இல்லை. ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாளர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும். அவர்களை வேலையை விட்டு நீக்காதபடி முடிவு எடுக்கப்படும். அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
ஏர் இந்தியா விமானிகள் யாரும் இதுவரை பணியை விட்டு செல்வதாக எனக்கு தகவல் வரவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். சில ஆலோசனைகள் நடந்து வருகிறது. அதற்கு பின் ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.கடன் அனைத்தையும் அடைக்கும் வகையில் மொத்தமாக இதை விற்க இருக்கிறோம், என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளார்.