சீன தாக்குதலின் போது உடனடி பதிலடி கொடுத்த வீரர்களை பாராட்டிய விமானப் படை தளபதி
டெல்லி: லடாக்கில் சீனா தாக்குதல் நடத்திய போது விரைந்து செயல்பட்டு அவர்களுக்கு பதிலடி கொடுத்த வீரர்களை நான் பாராட்டுகிறேன் என விமான படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா தெரிவித்தார்.
இந்திய விமானப் படையின் 88-ஆம் ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் விமானப் படை தின அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் தொடங்கின.
முதலில் விமானப் படை வீரர்கள் அணிவகுப்பை விமானப் படை தளபதி பதாரியா மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது பதாரியா கூறுகையில் எல்லையில் இந்தியா -சீனா இடையே பதற்றம் நிலவி வரும் இந்த காலகட்டத்தில் முழு அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறனை இந்திய விமானப் படை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
எந்த நேரத்தில் தேவைப்பட்டாலும் தேச நலனையும் இறையாண்மையையும் காக்க தயாராக இருக்குமாறு வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளோம். வட எல்லையில் ஏற்கெனவே சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய போது விரைந்து பதிலடி கொடுத்த இந்திய வீரர்களை பாராட்டுகிறேன் என்றார்.
1.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு.. மிக கனமழை கொட்ட போகுது.. முக்கிய அலார்ட்
இந்த நிகழ்வில் ரபேல் உள்ளிட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாக்கி ஸ்டேடியத்தின் அளவை விட குறைந்த பகுதியில் ரபேல் விமானம் லாவகமாக சுழன்று, 8 வடிவத்தை உருவாக்கி சாகசம் செய்தது. இது காண்போரை வியக்க வைத்தது.
தேஜாஸ் இலகுரக போர் விமானம், ஜாகுவார், மிக்-29, சுகோய்-30 விமானங்களும் அணிவகுப்பில் பங்கேற்றன. ஹிண்டன் விமானப்படை தளம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி பதாரியா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.