மெல்லிய பூங்காற்று... தலைநகரில் ஓராண்டுக்குப் பின் வீசும் தூய காற்று
டெல்லி: தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின் காற்று மாசு குறைந்து சற்று தூய்மையான காற்று வீசுகிறது.
பருவ நிலை மாற்றத்தால் பூமியின் நிலப்பகுதி மிக அதிகப்படியான வெப்பம் அடைவதால் காற்று மாசுபாடும் அதிகரிக்கிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால் விவசாயம் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் விவசாயம் பொய்த்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஆசியா, ஆப்பிரிக்காவிலுள்ள 95 சதவீத நகரங்கள் மோசமான பருவநிலை சார்ந்த அபாயங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, கால மாற்றம், உணவு முறை போன்ற காரணங்களால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 65 வயதாக மாறிவிட்டதாக கூறப்படும் நிலையில், தலைநகர் டெல்லியில், காற்று மாசு அளவுக்க அதிகமாக இருந்தது. அச்சம் கொள்ள வைத்த இந்த காற்று மாசு தற்போது மாறி வருகிறது.
காற்றின் தர அட்டவணையின் படி பூஜ்ஜியத்தில் இருந்து 500 புள்ளிகள் வரை மிக தீவிரம், மோசம், திருப்திகரம், தூய்மை என பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. டெல்லியில் கடந்த 24-ம் தேதி 164 ஆக இருந்த காற்று மாசு புள்ளிகள் கடந்த 25-ம் தேதிக்குப் பின் மழை காரணமாக படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி 50 முதல் 100 புள்ளிகளுக்குள் மாறி மாறியே கடந்த 5 நாட்களாக நிலவி வருகிறது. நேற்று 65 புள்ளிகளாகக் குறைந்தது.
இதையடுத்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின் டெல்லியில் காற்று மாசு குறைந்து சற்று தூய காற்று வீசுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மேலும் மாசு குறைந்து காற்று தூய்மையடையும் என குறிப்பிட்டுள்ளது.