ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை ஜன. 11 வரை கைது செய்ய தடை நீடிப்பு
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை ஜனவரி 11ம் தேதிவரை நீடித்து பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதற்கு ப. சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் கூறப்பட்டதால், சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் வழக்கு நடக்கிறது. இந்த விவகாரத்தில் இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில், இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட தடை ஜனவரி 11ம் தேதி வரை நீடிக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.