ஏர்செல்-மேக்சிஸ்: மாறன் சகோதரர்கள் விடுதலைக்கு எதிரான அப்பீல் மீதான விசாரணை அக்.1-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் அக்டோபர் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த போது ஏர்செல் நிறுவனப் பங்குகளை முறைகேடாக மிரட்டல்கள் மூலம் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனங்களுக்கு விற்க வைக்கப்பட்டது என்பது வழக்கு. இதில் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட், சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் ரூ.742.58 ஆதாயம் அடைந்த என சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள் தொடர்ந்தன.
இவ்வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற்றது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தன. இம்மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது,
Aircel-Maxis case against Maran brothers: Delhi High Court adjourns the matter for 1st October after Central Bureau of Investigation (CBI) sought time to file rejoinder. pic.twitter.com/elIuO19HL5
— ANI (@ANI) August 29, 2019
நீதிபதி சஞ்சீவ் சச்தேவா விசாரித்து வரும் இவ்வழக்கில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய சிபிஐ, அமலாக்கத்துறை கடந்த முறை அவகாசம் கேட்டிருந்தது. இதையடுத்து வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்றைய விசாரணையின் போதும் பதில் மனுத் தாக்கல்கள் செய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 1-ந் தேதிக்குள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதி சஞ்சீவ் சச்தேவா விசாரணையை ஒத்திவைத்தார்.