ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சி. கார்த்தியை கைது செய்ய மார்ச் 8 வரை தடை நீட்டிப்பு
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்வதற்கு இடைக்கால தடையை மார்ச் 8ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் 2006ம் ஆண்டு பதவியில் இருந்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் என்ற நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்தது. அதில் அமைச்சரவை குழுவில் அனுமதி பெறாமல் முதலீடு செய்தது மட்டுமின்றி பல கோடி ரூபாய் மோசடியும் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அதனையடுத்து, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவினர் தனித்தனியாக வழக்கு தொடர அந்த விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கிற்கு இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இருந்தும் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை மார்ச் 8ம் தேதிவரை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.