ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய மே 6 வரை தடை நீடிப்பு
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய் மே 6ம் தேதிவரை தடையை நீடித்து உத்தரவிட்டுள்ளது, சிபிஐ நீதிமன்றம்.
ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் கைதுக்கான தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26ம் தேதி வரை நீட்டித்தது நீதிமன்றம்.
இந்த தடை இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக சிங்கப்பூரில் இருந்து கிடைக்க வேண்டிய தகவல் இன்னும் வந்து சேரவில்லை என்றும், எனவே, கூடுதலாக 4 வாரகால அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார்.
இதைதொடர்ந்து, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை மே 6ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் இவ்வழக்கின் மறுவிசாரணையை நடத்த உள்ளது.