ஏர்செல் மேக்சிஸ் வழக்கில்.. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆகஸ்டு 9ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
2006ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதற்கு ப. சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்துவருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் வழக்கு நடக்கிறது. இதனிடையே, முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லியிலுள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் கைதுக்கான தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆகஸ்டு 9ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.