ஒரே நிறுவனத்தில் 700 ஊழியர்கள் பணி நீக்கம்.. என்ன நடக்கிறது.. மத்திய அமைச்சருக்கு ஏஐடியூசி கடிதம்
டெல்லி: லாக்டவுன் காலகட்டத்தை காரணமாக காட்டிக்கொண்டு, பணியாளர்களை வேலையில் இருந்து தனியார் நிறுவனங்கள் பல நீக்கிக் கொண்டிருப்பதை அகில இந்திய வர்த்தக சங்கம் (AITUC) மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.
Recommended Video
குறிப்பாக ஒரு சர்வதேச நிறுவனம் 700 பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியதை குறிப்பிட்டு ஏஐடியூசி கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, ஃபேர் போர்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஊழியர்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக, உங்களின் தலையீட்டை எதிர்பார்க்கிறோம்.
தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை இதுதொடர்பாக வழங்கவேண்டும்.
அனைத்து சட்ட திட்டங்களையும் மதிக்காமல் சட்டவிரோதமாக தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அந்த கடிதத்தில் ஏஐடியூசி தெரிவித்துள்ளது.
லாக்டவுன் காலகட்டத்தை சுட்டிக்காட்டி எந்த நிறுவனமும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. அதே போன்று தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தை பிடித்தம் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. அப்படி இருந்தும் சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு இந்த மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சில நிறுவனங்கள், தொழிலாளர்களை நீக்கம் செய்துள்ளன. இந்த நிலையில்தான் ஏஐடியூசியின், இந்த கோரிக்கை முக்கியமாக பார்க்கப்படுகிறது.