ராணுவ ரகசியத்தை கசியவிட்டவர்களை தண்டியுங்கள்...கருணை காட்டாதீர்கள்...ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்!
டெல்லி: நாட்டின் ராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி உள்ளன.
பாகிஸ்தானின் பாலக்கோட்டில் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் பயிற்சி முகாம் மீது 2019-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி இதுகுறித்து முன்கூட்டியே வாட்ஸ்அப்பில் இன்னொருவருடன் உரையாடியது சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பாலகோட்டில் நடந்த வான்வழித் தாக்குதல் குறித்த தகவல் கசிவு குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது.
ராணுவ ரகசியங்களை அசால்ட்டாக வாட்ஸ் அப்பில் பேசிய அர்னாப் கோஸ்வாமி.. விசாரணை நடத்த காங். வலியுறுத்தல்
ராணுவ நடவடிக்கைகளின் அதிகாரபூர்வ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம். இதற்கு யார் காரணம் என்றாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கருணை காட்ட கூடாது. அவர்கள் கருணை காட்டப்பட தகுதியற்றவர்கள் என்று ஏ.கே.ஆண்டனி தெரிவித்தார்.