ம.பியில் மக்கர் செய்யும் சமாஜ்வாடி.. ஒரே ஒருத்தர்தான்.. அவருக்கும் இல்லாட்டி எப்படி.. அகிலேஷ்
டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு ஒரே ஒரு எம்எல்ஏதான் இருக்கிறார். அவருக்கும் அமைச்சர் பதவி தராமல் தவிர்த்தது ஏன் என்று கேட்டுள்ளார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.
அகிலேஷ் யாதவின் இந்த புலம்பல் உ.பி.யில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது. உ.பியில் காங்கிரஸை திராட்டில் விட்டு சமாஜ்வாடி கட்சி டென்ஷனைக் கொடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாகியுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் அங்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ளது. சமாஜ்வாடியும் ஆதரவு தெரிவித்துள்ளது. சமாஜ்வாடி கட்சிக்கு ம.பியில் ஒரு இடத்தில் வெற்றி கிடைத்தது.
அமைச்சர் பதவி இல்லை
ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும் கூட அமைச்சர் பதவியைத் தரவில்லை கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இதனால் அகிலேஷ் யாதவ் கடுப்பாகியுள்ளார். இதை ஒரு பேட்டியில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கொடுக்காட்டி எப்படி
இதுகுறித்து அவர் கூறுகையில், சமாஜ்வாடி கட்சியின் ஆதரவைப் பெற்றும் கூட அக்கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காத காங்கிரஸுக்கு நன்றி. இதுபோன்ற அணுகுமுறை உ.பியிலும் எதிரொலிக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் அகிலேஷ் யாதவ்.
உ.பியில் சிக்கல் வரலாம்
2019 லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. உ.பியில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளை அது மனதில் வைத்துள்ளது. ஆனால் மாயாவதி, காங்கிரஸை உ.பியில் ஓரம் கட்டியே வைத்துள்ளார். இப்போது அகிலேஷும் ஓரம் கட்டக் கூடும் என்பதால் காங்கிரஸுக்கு பெரும் சிக்கல் காத்துள்ளது.
பாஜகவைத் தடுக்கவே ஆதரவு
அகிலேஷ் யாதவ் மேலும் கூறுகையில், மிகுந்த தயக்கத்துடன்தான் நாங்கள் காங்கிரஸை ம.பியில் ஆதரிக்கிறோம். அது கூட பாஜகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கத்தான். அதை காங்கிரஸ் புரிந்து கொள்ள மறுப்பது வியப்பாக உள்ளது என்றார் யாதவ்.
அதிருப்தியில் பகுஜன் சமாஜ்
சமாஜ்வாடியைப் போலவே பகுஜன் சமாஜ் கட்சியும் கூட அதிருப்தியுடன்தான் உள்ளதாம். பதவியேற்பு விழாவுக்கு உரிய முறையில் அழைப்பு வரவில்லை என்பது ஒரு அதிருப்தி என்றால், தங்களுக்கு முக்கியத்துவம் தர காங்கிரஸ் தவறி விட்டது என்ற கோபமும் கூட சேர்ந்துள்ளதாம்.
3வது அணியில் ஆர்வம்
இதற்கிடையே, கே.சந்திரசேகர ராவ் உருவாக்கத் திட்டமிட்டுள்ள 3வது அணிக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவிக்க ஆர்வம் காட்டுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஹைதராபாத் சென்று கேசிஆரை சந்திக்கவுள்ளேன். அவருடன் பேசுவேன் என்று கூறியுள்ளார். இதுவும் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.