பிரதமர் வேட்பாளர்.. காங். கனவு கலைகிறதா? ராகுல் காந்திக்கு வந்தாச்சு புது போட்டி!
Recommended Video
டெல்லி: பிரதமர் பதவிக்கு மாயாவதியை முன்னிறுத்த தயங்க மாட்டேன் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பை, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகிய இருவரும் கூட்டாக இன்று வெளியிட்டனர்.
இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளும் ஏற்கனவே முறையே, காங். தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி வசம் உள்ளது. எனவே அந்த தொகுதிகளில் இந்த கூட்டணி போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது. அதேநேரம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.
முக்கிய மாநிலம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. எனவே லோக்சபா தேர்தலில் வெற்றியை தீர்மானிக்க கூடிய முக்கியமான மாநிலமாக இந்த மாநிலம் பார்க்கப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் 73 தொகுதிகளை பாஜக கட்சி இங்கு பெற்றது. அக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
கடந்த தேர்தல்
சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. பகுஜன்சமாஜ் 19.8 சதவீத வாக்கு பெற்ற போதிலும், ஒரு சீட்டையும் வெல்ல முடியவில்லை. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளை வென்றது. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக மோதியதால் பாஜக எளிதாக வெற்றி பெற்று விட்டது என்ற கருத்து நிலவுவதால், இம்முறை வலுவான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் இணைந்து பாஜகவை சந்திக்கின்றன.
சூசகம்
இந்த நிலையில், "சூழ்நிலை எழுந்தால் மாயாவதி பிரதமராக ஆதரவு அளிப்பீர்களா" என்று அகிலேஷ் யாதவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், "எனது பதில் என்னவாக இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். உத்தர பிரதேசத்தில் இருந்து மற்றுமொருவர் பிரதமராக வர வேண்டும் என்பது எனது விருப்பம்" என்று கூறினார்.
ராகுல் காந்திக்கு போட்டி
ராகுல் காந்தி தான், எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், மாயாவதியை பிரதமர் வேட்பாளராக சூசகமாக முன்மொழிந்துள்ளார் அகிலேஷ் யாதவ். இதன்மூலம் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை வந்தால், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க வேண்டி வந்தால், அப்போது மாயாவதியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த சொல்லி, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் நிபந்தனை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராகுல் காந்தியின் பிரதமர் கனவு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.