அல்கொய்தா பயங்கரவாதி வீட்டில் பாதாள அறை.. டன் கணக்கில் வெடி மருந்துகள் பறிமுதல்.. விசாரணையில் பகீர்
டெல்லி: பயங்கர ஆயுதங்களையும் வெடி மருந்து உள்ளிட்ட வெடி பொருள்களை பதுக்கி வைப்பதற்காக அல்கொய்தா பயங்கரவாதி வீட்டில் பாதாள அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தவும் பல்வேறு நாசவேலைகளை செய்ய சதி திட்டம் தீட்டியிருப்பதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (என்ஐஏ) தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் கடந்த 18-ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் அதிரடி சோதனைகள் நடத்தினர்.
6 பேர்
இதில் எர்ணாகுளத்தில் 3 பயங்கரவாதிகளும் முர்ஷிதாபாத்தில் 6 பயங்கரவாதிகளும் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஆயுதங்கள், பணம், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. முர்ஷிதாபாத்தில் கைது செய்யப்பட்ட நஜ்மஸ் சாகிப், அபு சுபியன் முல்லா, மைனுல் மொண்டல், லியு யீன் அகமது, அல் மாமுன் கமால், அதிதுர் ரகுமான் ஆகிய 6 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கொல்கத்தா வீட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
என்ஐஏ காவல்
அவர்களை வரும் 24-ஆம் தேதி வரை என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மேற்கண்ட 6 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அபு சுபியன் முல்லாவின் முர்ஷிதாபாத் ராணி நகர் வீட்டில் பாதாள அறை ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது.
தப்பியோட முயற்சி
இதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்த அறையில் பல டன் வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் அபி சுபியன், வெள்ளிக்கிழமை இரவு என்ஐஏ அதிகாரிகளின் அதிரடி சோதனையின்போது தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது சுவர் ஏறி குதித்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
செல்போன்
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நஜ்மஸ் சாகீப் முர்ஷிதாபாத்தின் டோம்காலை சேர்ந்தவர். இவர் இரண்டாமாண்டு கல்லூரி மாணவர். அவருக்கும் காஷ்மீரில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுடன் அவர் செல்போன் மூலம் பேசியதும் தெரியவந்தது.
விசாரணை
இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த நபர் பேசியவர்களை பிடிக்க முயற்சிக்கிறார்கள். மேலும் வேறு எங்காவது யார் மூலமாவது நாச வேலைக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்களில் 4 பேரின் வங்கிக் கணக்குகளில் பெரிய மதிப்பிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.