முக்கிய கோரிக்கைகள்.. நாளை தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் 21 எதிர்க்கட்சிகள்.. அதிரடி முடிவு!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க இருக்கிறது.
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை நாளை சந்திக்க இருக்கிறது.
லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடந்தது. கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்தது. வரும் மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலின் போது வாக்குபதிவு எந்திரத்தில் பல இடங்களில் கோளாறு ஏற்பட்டது. எந்திர கோளாறு காரணமாக வாக்குபதிவு நடப்பதில் பல இடங்களில் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் வாக்குகள் தவறுதலாக பாஜக கட்சிக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
நாடு முழுக்க மொத்தம் 4 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு வேலை செய்யாமல் பிரச்சனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இவரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
இந்த நிலையில் தேர்தல் முடிந்துள்ள நிலையில் நாளை முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க இருக்கிறது. மொத்தம் 21 கட்சி சார்பாக தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க இருக்கிறார்கள்.
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, நவீன் பட்நாயக், சரத் பவார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சார்பாக இதற்காக புகார் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் பின் வரும் கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் வைக்க இருக்கிறார்கள்.
- வாக்கு பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு, முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும்.
- வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேட்டை தவிர்க்க வேண்டும்.
- வாக்கு பதிவு எந்திரங்களை முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாக்க வேண்டும்.
- மேற்கு வங்க கலவரம் குறித்து விசாரிக்க வேண்டும்.
மோடி மீதான தேர்தல் விதிமுறை மீறல் புகார்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க இருக்கிறது.