பந்த் எதிரொலி.. 2வது நாளாக தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் கடும் அவதி!
நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கேரளா, கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் 2வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கேரளா, கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் 2வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று நாடு முழுக்க அகில இந்திய பந்த் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இதனால் அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்தப் போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது. பல மாநிலங்களில் பேருந்துகள், கடைகள் இயங்கவில்லை.
தென்னிந்தியாவில் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த போராட்டம் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று கடைகள், நிறுவனங்கள் எப்போதும் போல இயங்கியது.
ஆனால் தமிழக எல்லையில் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டது. புதுச்சேரியில் இயக்கப்பட்ட சில பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரள எல்லையிலும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.