பிரஷர் மேல் பிரஷர்.. பொருளாதார சரிவால் சிக்கலில் நிர்மலா சீதாராமன்.. இன்று மாலை அவசர மீட்டிங்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார சரிவு காரணமாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறார்.
Recommended Video
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார சரிவு காரணமாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறார்.
இந்திய பொருளாதாரம் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் 2013ல் கொஞ்சம் சரிவை சந்தித்தது. அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாயை தொட்டது. இதை பாஜக கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்தது.
இரண்டு முறை பாஜக ஆட்சிக்கு வர கூட அந்த பொருளாதார சீர் குலைவு முக்கிய காரணம் என்று கூறலாம். தற்போது அதே பாஜக ஆட்சியின் கீழ் பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
என்ன மோசம்
நிதி அமைச்சராக அருண் ஜேட்லி இருந்த போதே இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக சரிவை நோக்கி சென்றது. அவர் நிதி அமைச்சராக இருந்த ஐந்து வருடம் இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்தது. முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை மிக கடுமையாக கண்டித்து இருந்தார்.
நிர்மலா
இந்த நிலையில்தான் கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பின்தான் இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்திக்க தொடங்கியது. தற்போது ரூபாய் மதிப்பு 72 ஆக சரிந்துள்ளது. வரிசையாக நிறைய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வீட்டிற்கு அனுப்பியது.
ஆட்டோமொபைல்
எல்லா துறைகளும் மிக மிக மோசமான சரிவை சந்தித்தது. மிக முக்கியமாக ஆட்டோமொபைல் துறை மாபெரும் வீழ்ச்சியை சந்தித்தது. பார்லே நிறுவனம் தனது பணியாளர்கள் 10 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பியது. பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஆலோசகரே இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது என்று கூறும் நிலைக்கு சென்றுள்ளது.
நிர்மலா சீதாராமன்
இந்த தொடர் சரிவுகள் காரணமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார். இதனால் அவர் மீது மத்திய அரசிடம் இருந்து அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நிர்மலா சீதாராமன் முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
ஆலோசனை
அதன்படி இன்று மாலை நிர்மலா சீதாராமன் தலைமையில் மத்திய நிதித்துறை சார்பில் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்று நடக்க உள்ளது. டெல்லியில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. முக்கிய பொருளாதார வல்லுநர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.