எல்லை விவகாரம்: அரசியல் அப்புறம்... மத்திய அரசுடன் ஒட்டுமொத்தமாக இணைந்த சபாஷ் எதிர்க்கட்சிகள்
டெல்லி: பிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தில், தேசத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்போம் என்று அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒருமித்து உரத்த குரலில் தெரிவித்திருக்கின்றன.
Recommended Video
லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தேசத்தை பேரிருள் கவ்வியதாக அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது இச்சம்பவம்.
இதனைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமையன்று ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவுக்குள் சீனா ஊடுருவவில்லை- ஒரு அங்குலம் நிலத்தையும் எடுக்க விடமாட்டோம்: பிரதமர் மோடி
சோனியாவின் 7 கேள்விகள்
இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில் மொத்தம் 7 சந்தேக கேள்விகளை முன்வைத்தார். புலனாய்வுத் துறை இந்த விவகாரத்தில் தோல்வியை தழுவிவிட்டது என்றார்.
பீகார் நிதிஷ்குமார்
பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ்குமார் பேசுகையில், இந்தியா தொடர்பான சீனாவின் நிலையை நாம் நன்கு அறிவோம். சீனாவுக்கு மரியாதை தரத்தான் இந்தியா நினைத்தது. ஆனால் 1962-ல் என்ன நடந்தது என்பதை அறிவோம். சீனாவுக்கு எதிராக தேசம் முழுவதும் பெருங்கோபம் இருக்கிறது. நம்மிடையே வேறுபாடுகள் இருந்தாலும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றார்.
மமதா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பேசுகையில், சீனா முன்பாக நாம் ஒருபோதும் தலைகுனிந்து மண்டியிட்டுவிடக் கூடாது. சீனா ஒரு ஜனநாயக நாடே இல்லை. அது ஒரு சர்வாதிகார தேசம். அவர்கள் என்ன தோன்றுகிறதோ அதை செய்யக் கூடியவர்கள். நாம் அனைவரும் ஒருமித்து நிற்போம். ரயில்வே, டெலிகாம் துறையில் சீனாவை மத்திய அரசு அனுமதிக்கவே கூடாது என வலியுறுத்தினார்.
சிரோமணி- சுக்பீர்சிங் பாதல்
சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர்சிங் பாதல், ஒட்டுமொத்த இந்தியாவும் பிரதமர் மோடியுடன் இணைந்து நிற்கிறது. நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்பதுதான் சீனாவுக்கு நாம் அனுப்பி வைத்திருக்கும் செய்தி. நிலைமையை மத்திய அரசு எப்படி கையாண்டது என்பது குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய தருணம் இது அல்ல என்றார்.
உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே தமது பேச்சின் போது, இந்தியா அமைதியையே விரும்புகிறது. அதற்காக நாம் பலவீனமானவர்களும் அல்ல. முதுகில் குத்துவதை வழக்கமாகவே வைத்திருக்கிறது சீனா. அனைத்து எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியது பாராட்டுக்குரியது. நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம் என கூறினார்.
சீதாராம் யெச்சூரி
மார்க்சிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சீதாராம் யெச்சூரி, உயர்நிலையிலான பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு இனி தொடங்க வேண்டும். எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி எது என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும். எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றார். மேலும் கார்கில் யுத்தத்துக்குப் பின்னர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சுப்பிரமணியம் கமிட்டி ஒன்றை அமைத்தார். ராணுவத்தை நவீனமயமாக்குவது உள்ளிட்ட அம்சங்களை அந்த குழு ஆராய்ந்தது. அதுபோல தற்போதும் மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றார்.
ஸ்டாலின், சரத்பவார்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக தலைவர் ஸ்டாலின், சிபிஐ பொதுச்செயலாளர் டி ராஜா, டி.ஆர்.எஸ். தலைவரும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ், ஒடிஷா முதல்வரும் பிஜூ ஜனதா தளத்தின் தலைவருமான நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர். அனைவரும் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தனர்.