ஒரே நாடு ஒரே தேர்தல்.. டெல்லியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியது
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்க டெல்லியில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு பலர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இது போல் ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் நடத்தப்பட்டால் பண விரயம் தவிர்க்கப்படும். அரசு அதிகாரிகள், ஆசிரியர்களை அவ்வப்போது தேர்தல் பணிக்கு அமர்த்தும் நிலையும் அவர்களுக்கு தேர்தல் பணி ஊதியம் கொடுக்கும் குறைக்கப்படும்.
தேர்தல் நேரங்களில் அவ்வப்போது பாதுகாப்பு அதிகாரிகளை பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். அடிக்கடி தேர்தல் வருகிறபோது நடத்தை விதிகளை அமல்படுத்துவதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகிறது. அது இது போன்று ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பாதிக்கப்படாது உள்ளிட்ட காரணங்கள் மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர்களை கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி , மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் திமுக, தெலுங்கு தேசம், காங்கிரஸ் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. கட்சியின் முக்கிய பிரதிநிதிகள், மாநில முதல்வர்கள் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமைக்கு பதில் நிர்வாகிகள் பங்கேற்க முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டதால் டெல்லி சென்றும் சிவி சண்முகம் அதில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.