அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும்: நிர்மலா சீதாராமன் அதிரடி
டெல்லி: மத்திய அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுமே தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா லாக்டவுனால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க ரூ20 லட்சம் கோடி பொருளாதார திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று 5-வது நாளாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:
லாக்டவுன் காலத்தில் 8.19 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8.19 கோடி விவசாயிகளுக்கு ரூ. 16,294 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2.2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3,950 கோடி நிதி உதவி வழங்கப்பட்டிருக்கிறது.
20 கோடி பெண்களின் ஜன்தன் கணக்குகளில் ரூ10,025 கோடியை மத்திய அரசு ஏற்கனவே செலுத்தியிருக்கிறது. பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல 85% ரயில் கட்டணத்தை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு ரயிலில் உணவும் வழங்கப்பட்டிருக்கிறது.
6.81 கோடி இலவச எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுள்ளனர்.. நிர்மலா சீதாராமன் தகவல்
பெண்களில் 6.81 கோடி பேர் இலவச எரிவாயு சிலிண்டர்களை லாக்டவுன் காலத்தில் பெற்றுள்ளனர். மேலும் 12 லட்சம் பி.எப். சந்தாதாரர்கள் ஆன்லைனில் இந்த லாக்டவுன் காலத்தில் பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். பி.எப். சந்தாதாரர்களுக்கு மொத்தம் இதுவரை ரூ.3660 கோடி வழங்கப்பட்டுள்ளது
சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி ஏற்கனவே ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். தற்போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ரூ.4,113 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு தனியாக ரூ.3,750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
பிரதமர் கரீப் யோஜ்னா திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு ரூ50 லட்சம் இன்சூரன்ஸ் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்விக்காக ஏற்கனவே 3 தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தற்போது புதிதாக மேலும் 12 தொலைக்காட்சி சேனல்கள் கல்விக்காக உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த கல்வி தொலைக்காட்சிகள் நாளொன்றுக்கு 4 மணி நேரம் ஒளிபரப்பப்படும். 1-ம் வகுப்பு முதல் 12- வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தனி கல்விச் சேனல் அறிமுகப்படுத்தப்படும். ஆசிரியர்கள் மாணவர்கள் இடையேயான உரையாடல்கள் கல்வித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும். இணையதளம் மூலம் கல்வி கற்பதற்காக ''ஐ காட்'' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலை திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ 61,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது 100 நாள் வேலை திட்டத்துக்காக கூடுதலாக ரூ 40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 300 மனிதவேலை நாட்கள் உருவாக்கப்பட இருக்கிறது.
ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க இ-வித்யா என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்கப்படும்.
நாட்டின் 100 பல்கலைக் கழகங்கள் மே 30-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க உள்ளன. ஆன்லைன் கல்வி திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. மின்னணு பாடசாலை திட்டத்தின் கீழ் 200 பாடநூல்கள் ஆன்லைனில் ஏற்றப்படும்.
தொழில் நிறுவனங்கள் கொரோனா லாக்டவுனால் கடன்களை கட்ட முடியாத நிலை இந்தால் அவற்றுக்கு எதிரான திவால் நடவடிக்கைகள் ஒராண்டுக்கு மேற்கொள்ளப்படாது. மேலும் ரூ.1 கோடி வரை வசூல் செய்ய வேண்டிய நிலை வந்தால் மட்டுமே நிறுவனங்கள் திவாலானதாக இனி அறிவிக்கப்படும்.
தேசிய அளவில் முக்கியத்துவம் இல்லாத அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இனி தனியார்மயமாக்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.