மக்கள் ஊரடங்கு.. ஞாயிறு அன்று ஓட்டல், காய்கறி கடை உள்பட அனைத்தும் குளோஸ்.. அந்த ஒரு கடையை தவிர?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மக்களே மக்களுக்காக வரும் 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 'ஜனதா ஊரடங்கு' (மக்களின் ஊரடங்கு) நடைபெற வேண்டும் என்று கூறினார்.
இதற்கு ஆதரவு தெரிவித்து அன்றைக்கு கிட்டத்தட்ட மருந்துகடைகளை தவிர அனைத்தும் அடைக்கப்பட உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகள் குறித்து மட்டும் கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இதுவரை அரசு எந்த அறிவிப்பில் வெளியிடவில்லை.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டு மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி மக்களுக்கு முக்கியமான வேண்டுகோள் வைத்தார், இதன்படி மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வீடுகளுக்குள் இருக்கவேண்டும். இது மக்கள் ஊரடங்கு உத்தரவாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். எனினும் மிக மிக அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என்று வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர், ஞாயிறு அன்று மார்க்கெட் செயல்படாது விடுமுறை என்று அறிவித்தனர். அதனை தொடர்ந்து தனியார் பால் விற்பனையாளர்கள் சங்கமும் ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதேபோல் தமிழ்நாடு ஓட்டல் சங்கமும் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அனைத்தையும் அடைத்து ஊரடங்குக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் அனைத்து ஜவுளி கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மால்கள், தியேட்டர்கள், நகைக்கடைகள் கோயில்கள், வாரசந்தைகள், திருமண மண்டபங்கள், நட்சத்திர விடுதிகள், மிகப்பெரிய ரெஸ்டாரண்டுகள் என பெரிய வணிக நிறுவனங்கள் இன்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை அடைக்கப்பட உள்ளது.
மருந்து கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் திறந்திருக்குமா அல்லது மூடப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை. முன்னதாக டாஸ்மாக் பார்களை அடைக்க உத்தரவிட்ட தமிழக அரசு மதுக்கடைகளை அடைக்க உத்தரவிடவில்லை. எனினும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே கொரோனா அச்சம் காரணமாக டாஸ்மாக் கடைகளில் 19 சதவீதம் வியாபாரம் சரிந்துள்ளது.