பேசுங்க சார்.. டெல்லி கலவரத்தில் இறந்தவர்கள் எல்லாம் இந்தியர்கள்.. பிரதமர் மௌனம் காப்பது ஏன்.. ஓவைசி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும் என்று எஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தி உள்ளார்.
டெல்லி வன்முறை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ள ஓவைசி, அவரது வீட்டில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் தான்இந்த வன்முறை நடந்திருக்கிறது என்றார்.
டெல்லியில் சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே நடந்த போராட்டத்தில் ஒரு பிரிவு மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். சுமார் 42 பேர் 25ம் தேதி ஏற்பட்ட வன்முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் அனைவரும் வன்முறையை கைவிட வேண்டும். அமைதி திரும்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 27ம் தேதி கோரிக்கை வைத்தார். ஆனால் இதுவரை பிரதமர் மோடி வன்முறை பாதித்த இடங்களை பார்வையிடவில்லை. இதேபோல் டெல்லி வன்முறை தொடர்பாக எந்த கருத்தையும் இதுவரை அவர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் ஹைதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பிரதமர் மோடியின் மௌனம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அவர் இது தொடர்பாக கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நடந்த வன்முறை குறித்து ஏன் ஒரு வார்த்தை கூட பிரதமர் பேச வில்லை என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். டெல்லி வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி இது பற்றி பேச வேண்டும். சிவ் ஹிரை ஒருமுறை பார்வையிடுங்கள். ஏனெனில வன்முறையில் இறந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள்.
நமது பிரதமரிடம் அவரது கட்சி (பாஜக) தலைவர்கள் கூறிய அறிக்கைகாளல் தான் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது என்று நான் கூற விரும்புகிறேன். இது ஒரு இனப்படுகொலை. 2002ல் குஜராத்தில் பிரதமருக்கு பாடம் கிடைத்தது என்று நான் நினைத்தேன். 2020 ம் ஆண்டு டெல்லியிலும் ஒரு இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது.