கர்நாடகாவை தொடர்ந்து உ.பி.யிலும் காங்கிரஸ் அதிரடி.. அனைத்து கமிட்டிகளும் கூண்டோடு கலைப்பு
டெல்லி: உத்தரபிரதேச மாவட்ட அனைத்து காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டுள்ளன. இடைத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுக்கு 2 நபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியை தவிர, காங்கிரஸ் போட்டியிட்ட உத்தர பிரதேசத்தின் பிற அனைத்து தொகுதிகளிலும், அக்கட்சி தோல்வியடைந்தது. அமேதி தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே கூட தோல்வியடைந்தார்.
பாரம்பரியமாக காங்கிரசுக்கு வெற்றியை வாரிக் கொடுத்த உத்தர பிரதேசம், இப்போது பாஜக கோட்டையாகியுள்ளது. இந்த நிலையில்தான், அம்மாநில அனைத்து மாவட்ட கமிட்டிகளையும் கலைத்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ள, உத்தர பிரதேச சட்டசபை தொகுதிகளுக்கு, தொகுதிக்கு தலா இருவர் கொண்ட குழு மேற்பார்வை பணிகளுக்காக அமைக்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலின்போது, கட்சியினர் மீது வந்த புகார்கள் குறித்து, விசாரிக்க, 3 நபர்கள் கொண்ட ஒழுங்குமுறை கமிட்டி அமைக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவரான அஜய் குமார் லாலுவிற்கு, உத்தர பிரதேச கிழக்கு பிராந்திய, காங்கிரஸ் நிர்வாகத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அதிகாரம் கொடுக்கப்படுகிறது. உத்தர பிரதேச மேற்கு மண்டல பொறுப்பாளர் யார் என்பது, பின்னர் தேர்ந்தெடுக்கப்படும். இவ்வாறு வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்கள் முன்பாக, கர்நாடகாவிலுள்ள அனைத்து கமிட்டிகளையும் காங்கிரஸ் கலைத்தது. தலைவர் மற்றும் செயல் தலைவரை தவிர அனைத்து பதவியிடங்களும் பறிக்கப்பட்டன. அந்த மாநிலத்திலும், காங்கிரஸ், பெங்களூர் ஊரகம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணி கட்சி மஜத ஹாசன் தொகுதியில் மட்டும் வென்றது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில், அதிரடியை ஆரம்பித்துள்ளது காங்கிரஸ். இவை பலன்தருமா, அல்லது, பிரச்சினையை சிக்கலாக்குமா என்பது போகப்போக தெரியும்.