இந்தியாவின் முகத்தை மாற்ற போகும் குடியுரிமை சட்ட திருத்தம்.. ஏன் இது சர்ச்சையாகிறது? என்ன பிரச்சனை?
இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா பல்வேறு காரணங்களால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
டெல்லி: இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா பல்வேறு காரணங்களால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்த மசோதாவின் சில விதிகள் இந்தியாவின் மொத்த தோற்றத்தையே மாற்றி அமைக்கும் என்கிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து நீங்கள் அதிகம் கேள்விப்பட்டு இருக்க நேரிடும். இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது, இதனால் இந்தியாவின் பூர்வகுடி மக்கள் பலர் பெரிய அளவில் சிக்கலுக்கு உள்ளாவார்கள் என்று நிறைய செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்திய வரலாற்றில் தாக்கல் செய்யப்பட மசோதாக்களில் மிக முக்கியமான மசோதாவாக இது பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவின் இன்று செய்யப்படும் மாற்றங்கள், பெரிய அளவில் அரசியல் பிரச்சனைகளை, மாற்றங்களை, சிக்கல்களை ஏற்படுத்த போகிறது.
எப்படி இருக்கிறது
1955ல் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் சட்ட திருத்தம்தான் இந்த இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகும் .இந்த பழைய சட்டத்தின் படி, இந்தியாவில் பிறந்தவர்களும், இந்தியாவிற்கு முறையாக அனுமதியோடு வந்து 11 வருடங்கள் வாழ்ந்தவர்களும் மட்டுமே இந்திய குடியுரிமை பெற முடியும். முறையின்றி இந்தியாவில் குடியேறிய யாரும் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது.
ஆனால் என்ன
தற்போது அதில் திருத்தம் மேற்கொண்டு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருக்கிறது பாஜக அரசு. இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அரசு அவர்களை கைது செய்யாது.
முடியும்
முன்பெல்லாம் முறையின்றி இந்தியாவில் குடியேறினால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள். ஆனால் புதிய சட்டப்படி இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். அதாவது அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.
எத்தனை வருடம்
இவர்களை இந்தியாவில் அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் 11 வருடம் என்பது குறைக்கப்பட்டு 6 வருடங்களில் இவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.இவர்களை கைது செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது
இஸ்லாம் சிக்கல்
ஆனால் இது இஸ்லாமியர்களுக்கு எப்படி எதிரானது என்று கேட்கலாம். இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. அவர்கள் இந்தியாவில் முறையின்றி நுழைய இதுபோல அனுமதி கிடையாது. இதற்கு முன் எத்தனை வருடங்களுக்கு முன் இஸ்லாமியர் ஒருவர் இந்தியாவில் நுழைந்து இருந்தாலும் அவர் கைது செய்யப்படுவார் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் .
என்ன உதாரணம்
உதாரணமாக 2013ல் ஒரு இந்துவும் , இஸ்லாமியரும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவில் முறையின்றி குடியேறி இருந்தால், அதில் இந்துவுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும். மாறாக இஸ்லாமியர் சிறைக்கு செல்வார் அல்லது நாட்டை விட்டு செல்வார். இதுதான் இந்த மசோதா எதிர்க்கப்பட காரணம்.
மக்கள் கொதிப்பு
இந்த மசோதா வடகிழக்கு மாநிலங்களில் பெரிய கொதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் நிறைய வெளிநாட்டினர் முறையின்றி நுழைய வாய்ப்பு இருக்கிறது என்று மக்கள் போராடி வருகிறார்கள். தங்கள் கலாச்சாரம் மொத்தமாக இதனால் பாதிக்கப்படும் என்று இவர்கள் போராடி வருகிறார்கள்.
மிக மோசம்
இதனால் 2014-ம் ஆண்டு இறுதிவரை இந்தியாவுக்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதில் முஸ்லிம்கள், இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படாததால் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவத்துக்கு எதிரானது என எதிர்ப்பு எழுந்துள்ளது.புதிய மசோதாவின் மூலம் முஸ்லீம் அல்லாத பல லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும்.வங்கதேசத்தில் இருந்து அசாமில் குடியேறிய பல லட்சம் முஸ்லிம்கள் சிக்கலை சந்திப்பார்கள்.
இன்று தாக்கல்
இந்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.