பதவிகளுக்காக பாஜக-வுடன் கூட்டணி அல்ல.. கொள்கை அடிப்படையிலே தான்.. உத்தவ் தாக்கரே விளக்கம்
கோலாப்பூர்: மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு அமைச்சர் பதவிகள் தராததால், பாஜக மீது எந்த கோபமும் இல்லை என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல்களில், மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக - சிவசேனா கூட்டணி, அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், 41 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று அசத்தியது. இதில் சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் தங்களுக்கு 3 மத்திய அமைச்சர்பதவி வேண்டும் என சிவசேனா கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அக்கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்த் மட்டுமே மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றார். இதனால் கூட்டணி கட்சியான பாஜக மீது, சிவசேனா கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது.
இதன் காரணமாக மக்களவை தேர்தலுக்கு முன்னர், பாஜக தலைமையிலான அரசை விமர்சித்தது போலவே மீண்டும் காட்டமான விமர்சனங்களை முன்வைக்க சிவசேனா தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில் கோலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே, நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் கொடுக்காததால், பாஜக மீது எந்த கோபமும் இல்லை என விளக்கமளித்தார். பாஜக - சிவசேனா கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது.
இந்துத்துவ கொள்கை அடிப்படையில் தான் பாஜக-வுடன் சிவசேனா கூட்டணி அமைத்துள்ளதே தவிர, பதவிகளுக்காக அல்ல என்றார். அப்படி ஒருவேளை எங்களுக்கு பாஜக மீது கோபம் இருந்தால், அதனை நாங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தி விடுவோம். அப்படி வெளிப்படுத்துவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்றார்.
பயிர் கடன்களை பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை
மக்களவையில் பாஜக-விற்கு அடுத்து பெரிய கட்சியாக உள்ளது சிவசேனா. எனவே தான் மக்களவை துணை சபாநாயகர் பதவி தங்கள் கட்சிக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம். அந்த பதவியை பெறுவது எங்கள் உரிமையே. எனவே தான் அந்த பதவியை கேட்கிறோம் என்றார்.
மேலும் பேசிய உத்தவ் தாக்கரே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டுள்ளார். இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஏனெனில் இந்து ஒருவர் முதல்வராகும் பட்சத்தில், காஷ்மீரை விட்டு வெளியேறிய இந்து பண்டிட்கள் மீண்டும் தங்களது தாய் பூமிக்கு திரும்பும் வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிட்டார்.
அயோத்தியில் உடனடியாக ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை துவக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தனது கட்சியை சேர்ந்த 8 எம்பி-க்களுடன் விரைவில் அயோத்தி செல்ல உள்ளதாக கூறினார் உத்தவ் தாக்கரே.