கர்நாடகாவில் காங்கிரசுடன் கூட்டணி... மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
டெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 10 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான தேவகவுடா உடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நடத்திய ஆலோசனையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்டது.
கர்நாடகாவில் 28 தொகுதிகள் உள்ளன. இதில், தங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரசிடம், மதசார்பற்ற ஜனதா தளம் வலியுறுத்தி வந்தது. இதனால் இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.
இன்விடேஷனில் விஜயகாந்த் பெயர் இல்லை.. ஆனால் ஈவ்னிங் வந்துருவாராம்.. களை கட்டும் மோடி கூட்டம்!
கடந்த இரு மாதங்களாக இரு கட்சி தலைவர்களும் தொகுதி பங்கீடு தொடர்பாக, 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தநிலையில், தேவகவுடாவை சந்தித்து ராகுல் காந்தி பேசிய நிலையில்,10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
கடந்த 3 மக்களவைத் தேர்தலிலும் மஜத 2-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட வெற்றிப்பெறவில்லை. எனவே 12 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பே இல்லை என கூறப்பட்ட சூழலில், 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
மேலும், மண்டியா, மைசூரு, தும்கூரு, ஹாசன், கோலார், சிக்பளாப்பூர், பெங்களூரு ஊரகம் உள்ளிட்ட தொகுதிகளை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.