நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர்ந்து வழக்குகள்.. உச்ச நீதீமன்றத்திற்கு மாற்ற கோரி பாபா ராம்தேவ் மனு
டெல்லி: அலோபதி மருத்துவம் குறித்து பேசிய சர்ச்சைக் கருத்துக்காக நாடு முழுவதும் டாக்டர்கள் தன் மீது தொடர்ந்துள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மாதம் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது ஒரு சர்ச்சை வெடித்தது, கொரோனா வைரஸுக்கு எதிரான அலோபதி மருந்துகளின் செயல்திறன் எப்படி இருக்கிறது என்று யோகா குரு பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக பாபா ராம்தேவ் பேசிய வீடியோ ஒன்று வைரலானது "அலோபதி மருந்துகள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இறந்துவிட்டனர், சிகிச்சை அல்லது ஆக்ஸிஜன் கிடைக்காததால் இறந்தவர்களை விட இது மிகவும் அதிகம்" என்று கூறியிருந்தார். இதனால், நாடு முழுவதும் கோபமடைந்த மருத்துவர்கள் பாபா ராம்தேவ்க்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள்.
இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு, அலோபதி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பாபா ராம்தேவுக்கு எதிராக ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இன்னும் ஒரு படி மேலே போய், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக அவதூறுகளைத் தெரிவித்துவரும் பாபா ராம்தேவ் மீது தேசதுரோக குற்றச்சாட்டின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தது.
கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்
இந்நிலையில் தனக்கு எதிராக இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றும்படி உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் அலோபதி மருத்துவம் குறித்து கூறியதற்காக தன் மீது காவல்நிலையங்களில் எப்ஐஆர் பதிவு செய்ய தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.