தமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்
டெல்லி: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ல் நடைபெற்று, மே 2ல் ரிசல்ட் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 88936 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்படுகின்றது. கடந்த தேர்தலை ஒப்பிடும் பொழுது 34.73 சதவிகித வாக்கு பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளில் 44 தனித் தொகுதிகள், 2 பழங்குடியினர் தொகுதிகள் உள்ளன.
5 மாநிலங்களின் 824 தொகுதிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு நேரம் 5 மாநிலங்களிலும் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்படும். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது இரண்டு பேர் மட்டுமே உடன் வரவேண்டும் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், 30.8 லட்சம் ரூபாய் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு செலவு செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால், தேர்தல் முடிவு மே 2ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை அறிய, வாக்குப்பதிவு நடைபெற்ற பிறகு, கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 6ல் வாக்குப்பதிவு நடைபெற்று, மே 2ல் ரிசல்ட் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருப்பது தமிழக அரசியல் காட்சிகளை மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
ஏனெனில், தமிழக கட்சிகள், வாக்குப்பதிவு நடைபெற்று 10 நாட்களுக்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை நிராகரித்து ஒரு மாதம் வரை முடிவுக்கு காத்திருக்க வைத்துவிட்டது.
கடந்த 2011 தமிழக சட்டமன்ற போது, ஏப்ரல் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முழுதாக ஒரு மாதம் முடிவுகளுக்காக கட்சிகள் காத்திருந்தன. தற்போது மீண்டும் அதேபோன்றதொரு சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.
படாதபாடுபட்டு தேர்தலை நடத்தி, மக்களின் ஆதரவைப் பெற போராடி, எந்தவித சிக்கலும், குழப்பமுமின்றி தேர்தலை முடித்து முடிவை எதிர்நோக்கலாம் என்று நினைத்த கட்சிகளுக்கு இந்த ஒருமாத கால இடைவெளி, ஒவ்வொரு நாளின் தூக்கத்தையும் கெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.