ஐக்கிய அரபு எமிரேட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு விரைவில் விமானம் இயக்கப்படும்... தூதர் விளக்கம்!
டெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்டில் பணியாற்றுவதற்கான உரிய அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் அங்கு குடியுரிமை வைத்து இருக்கும் இந்தியர்கள் திரும்பவும் அந்த நாட்டிற்கு செல்ல விரைவில் விமானம் இயக்கப்படும் என்று இந்தியாவுக்கான அந்த நாட்டின் தூதர் அஹமத் அல் பன்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் இந்தியா சர்வதேச விமான போக்குவரத்தை ரத்து செய்தது. சில இடங்களில் சிக்கிக் கொண்ட இந்தியர்கள் மட்டும் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பலரும் தங்களது வேலைகளுக்கு திரும்ப வேண்டும் என்றும், மீண்டும் விமானங்களை இயக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்டுக்கும் இயக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
பணியாற்றுவதற்கான உரிய அனுமதி வைத்து இருந்து, குடியுரிமை பெற்று இருப்பவர்கள் திரும்பவும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்ல இந்தியாவில் இருந்து விமானம் இயக்கப்படுமா என்று பிஹெச்டி சேம்பர் காமர்ஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பதிலை அஹ்மத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் அளித்திருக்கும் விளக்கத்தில், ''பிரச்சனை ஐக்கிய அரபு எமிரேட்டிடம் இல்லை. இந்தியாவிடம்தான் இருக்கிறது. இந்தியா இன்னும் விமான தளங்களை திறக்கவில்லை. இந்த நிலையில் விமானங்கள் வருவதற்கு இந்திய அரசு அனுமதிக்காது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்துதுறை அமைச்சகத்திடம் பேசி வருகிறோம்.
விரைவில் இதற்கு முடிவு காணப்படும். உரிய அனுமதி வைத்திருந்து, கொரோனா பரிசோதனை செய்த பின்னர்தான் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஐக்கிய அரபு எமிரேட்டில் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு 7 மெட்ரிக் டன் மருத்துவப் பொருட்கள்... நேசக்கரம் நீட்டும் ஐக்கிய அரபு அமீரகம்
தகுதியான இந்தியர்கள் செய்ய வேண்டியது, முன்னதாக ''முகவரி குடியுரிமை கூட்டமைப்பு'' ஆணையத்துக்கான இணையத்தில் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு வருவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சர்வதேச விமானம் இயக்குவது குறித்து பேட்டியளித்து இருந்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜூலை மத்தியில் விமானங்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்'' என்று தெரிவித்து இருந்தார்.