கட்டாயத்தின் பேரிலேயே அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது... சர்ச்சையை கொளுத்தி போட்ட ஒவைசி
டெல்லி:கட்டாயத்தின் பேரில் தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டதாக அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் மற்றும் இசைக் கலைஞர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒவைஸி, கட்டாயத்தின் பேரில் தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதாக பேசினார்.
கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: இதுவரை பாரத ரத்னா விருது பெற்றவர்களில் எத்தனை பேர் தலித், ஆதிவாசி, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஏழைகள், எத்தனை பேர் பிராமணர்கள், உயர்சாதியினர் என்று சொல்ல முடியுமா? கட்டாயத்தின் பேரில்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதே தவிர மனமுவந்து அவருக்கு அந்த விருது வழங்கப் படவில்லை என்றார்.
கடந்த செப்டம்பர் மாதம், மகாராஷ்டிராவில் அம்பேத்கரின் பேரன் நடத்தும் கட்சியுடன் ஒவைஸி கூட்டணி அமைத்தார். மகாராஷ்டிர சட்டசபை தேர்தலுக்காக பாரிபா பகுஜன் மஹாசங் என்ற கூட்டணி உருவாக்கப் பட்டுள்ளது. இந்தக் கூட்டணிக்கு பிரகாஷ் அம்பேத்கர் தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவைஸியின் கருத்துகள் குறித்து, பகுஜன் சமாஜ் கட்சியின் சுதீந்திரா படோரியா கூறியதாவது:வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மாயாவதியும், கன்சிராமும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது பெற்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இப்போது கன்சிராமுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அவ்வாறு வழங்கினால் அது வரவேற்கத்தக்க முடிவு என்று கூறினார்.